நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 79,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 79,016 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, டெங்கு நோயினால் இதுவரை 57 மரணங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியான கணக்கெடுப்பில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அந்த மாவட்டத்தில் மாத்திரம் 16,676 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 15,748 நோயாளர்களும், மாத்தறையில் 5,495 பேரும், கண்டியில் 5,318 பேரும், களுத்துறையில் 5,190 பேரும், இரத்தினபுரியில் 4,444 பேரும், காலியில் 4,391 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் முதல் 22 நாட்களில் மாத்திரம் 23,641 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கி நிற்கும் நீர் நிலைகளை அகற்றி, டெங்கு நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் டெங்கு நோய் பரவல் தொடர்ந்து அவதானிக்க வேண்டிய நிலையாக காணப்படுவதால், பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.



