31.3 C
Sri Lanka
Thursday, June 11, 2026
HomeLocal Newsமலையக மக்களின் பாதுகாப்பு தொடர்பில் முக்கிய ஆலோசனை

மலையக மக்களின் பாதுகாப்பு தொடர்பில் முக்கிய ஆலோசனை

மலையக சமூகம் எதிர்கொள்ளும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் இன்று (21)பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல, பெருந்தோட்டக் கைத்தொழில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உட்பட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். 

அத்துடன், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய ஆகிய மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட இலங்கை பொலிஸாரின் சிரேஷ்ட அதிகாரிகள், தோட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தோட்ட அத்தியட்சகர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர். 

பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள மலையக மக்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் கடந்த காலத்தில் காணிப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பாக அண்மைய நாட்களாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளால் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 

இதற்கமைய, இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மிக விரைவில் தலையிடுவதாக அமைச்சர் அண்மையில் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்ததுடன், இலங்கை பொலிஸாரின் தலையீட்டுடன் அந்தத் தாக்குதல்கள் குறித்து மிக விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

எனினும், அந்தத் தாக்குதல்களுக்குக் காரணமாகக் காணி தொடர்பான விவகாரங்களே இனங்காணப்பட்டுள்ளதுடன், இப்பிரச்சினைகளுக்குத் நிலையான தீர்வைக் காண வேண்டியது அவசியமாகும். 

எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் முன்னெடுப்பில் இக்கலந்துரையாடல் நடத்தப்பட்டது. 

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், எந்தவொரு தரப்பினரும் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட முடியாது என்றும், தோட்ட அத்தியட்சகர்களுக்கும் பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் சட்டத்தின் முன் சம வாய்ப்பு உள்ளது என்றும், அனைத்துப் பிரச்சினைகளும் சட்டக் கட்டமைப்புக்குள் இருந்தே தீர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

அத்துடன், இவ்வாறான தாக்குதல்கள் பதிவாகுமாயின், தராதரம் பாராமல் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸாருக்கு அறிவுறுத்தினார். 

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்தத் தாக்குதல்கள் உள்ளிட்ட மோதல் சூழ்நிலைகளுக்குக் காணி அடிப்படையிலான பிரச்சினைகளே காரணம் என இனம் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

இது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினதும், பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்தியாரத்னவினதும் அவதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் முன்னெடுப்பில் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குக் குழுவொன்றை நியமிக்கவும், நிலையானதொரு வேலைத்திட்டத்தைத் தயாரிக்கவும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_img

Most Popular

Recent Comments