ஹட்டன் – டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தனியாக வாழ்ந்து வந்த வயோதிப தம்பதியினர் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள், 82 வயதுடைய எஸ். காளிமுத்து சத்தியவேல் மற்றும் அவரது மனைவி சகுந்தலாதேவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத நபர் அல்லது குழுவொன்று குறித்த வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து தம்பதியினரை தாக்கிக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
உயிரிழந்த தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பு பகுதியில் வசித்து வருகின்றனர். அவர்கள் வழக்கம்போல் பெற்றோரின் நலனை விசாரிக்க தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டபோதும், நீண்ட நேரமாக எந்த பதிலும் கிடைக்காததால் சந்தேகமடைந்து அயலவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அயலவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று வர்த்தக நிலையத்தைத் திறந்து பார்வையிட்டபோது, தம்பதியினர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், சம்பவம் தொடர்பில் உடனடியாக ஹட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தம்பதியினர் நீண்டகாலமாக அங்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததுடன், அண்மைக்காலமாக கடையை மூடி அதே இடத்தில் தனியாக வசித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், கொலையின் பின்னணி மற்றும் அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



